சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 947 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு


சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 947 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 7:25 AM GMT (Updated: 6 Sep 2021 7:25 AM GMT)

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளதால் சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் 947 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 246 மில்லியன் கன அடி (9.246 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 78 சதவீதம் ஆகும்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

தினசரி குடிநீர் வினியோகம்

இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 2 ஆயிரத்து 650 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஆயிரத்து 124 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 9 ஆயிரத்து 246 மில்லியன் கன அடி (9.246 டி.எம்.சி.) தண்ணீர் இருக்கிறது. இதனையடுத்து சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1000 மில்லியன் லிட்டர்

கடந்த காலங்களில் சென்னையில் நாளொன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 947 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் அளவில் இது அதிகபட்சம் ஆகும்.

ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் தினசரி தண்ணீர் வினியோகத்தை 1000 மில்லியன் லிட்டராக அதிகரிக்க குடிநீர் வாரிய அதிகாரி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, ‘லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்புவதை குறைத்து குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் வரும் வாரங்களில் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்’ என்றார்.

Next Story