வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி
x
தினத்தந்தி 7 Sep 2021 6:22 PM GMT (Updated: 7 Sep 2021 6:22 PM GMT)

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது. 
வேளாங்கண்ணி பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப் பேராலயம் திகழ்கிறது. 
உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். 
இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கொடியேற்றத்துடன் தொடங்கியது
இந்த ஆண்டுக்கான பெருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  
வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 
பெரிய தேர்பவனி
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கியமாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி வந்து தேர்கொட்டகையை அடைந்தது. 
முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர் பவனியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. 
இன்று கொடியிறக்கம்
இன்று(புதன்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 
இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடக்கிறது. தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

Next Story