கிருஷ்ணகிரி அருகே குட்டிகளுடன் 8 யானைகள் முகாம் 30 ஏக்கர் பயிர்கள் சேதம்


கிருஷ்ணகிரி அருகே குட்டிகளுடன் 8 யானைகள் முகாம் 30 ஏக்கர் பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 11 Sep 2021 6:03 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 8 யானைகள் 30 ஏக்கர் விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளன.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 8 யானைகள் 30 ஏக்கர் விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளன.
யானைகள் முகாம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊடேதுர்க்கம், சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி, வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானை உள்ளன. இந்த யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டு அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேப்பனப்பள்ளி அருகே விளைநிலத்தில் இரவில் காவலில் இருந்த 2 விவசாயிகளை ஒற்றை யானை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியானார்கள்.
பயிர்கள் சேதம் 
கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ள மகாராஜகடை கிராமம் அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக 3 குட்டிகளுடன் 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கடந்த சில நாட்களாக இரவில் வனப்பகுதியை விட்டு உணவுக்காக அருகே உள்ள மகாராஜ கடை கிராமங்களுக்கு நுழைந்து சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள நெல், வாழை, தக்காளி, தென்னை, மா மரங்கள் மற்றும் சொட்டு நீர்பாசன குழாய்கள் போன்றவற்றை சேதப்படுத்தின.
பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள், இளைஞர்கள் அந்த பகுதியில் இரவு நேரத்தில் தீ பந்தங்களை கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் வருகிறார்கள். மேலும் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை அவர்கள் விரட்டி வருகிறார்கள். இந்த யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story