கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 549 வழக்குகளில் தீர்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 549 வழக்குகளில் தீர்வு
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 11 Sep 2021 6:03 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலமாக 549 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலமாக 549 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் 
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி லதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், சிறப்பு சார்பு நீதிபதி ராஜமகேஷ், சிறப்பு கூடுதல் சார்பு நீதிபதி குமராவர்மன் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
549 வழக்குகள் 
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு 1,792 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 549 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.5 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 221-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story