கை மணிக்கட்டையும் அறுத்தார்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கை மணிக்கட்டையும் அறுத்தார்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2021 10:59 AM GMT (Updated: 12 Sep 2021 10:59 AM GMT)

கை மணிக்கட்டை அறுத்ததுடன், தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர், 10-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). இவருடைய மனைவி கல்பனா (55). இவர்களுடைய மகன் சீனிவாசன் (21). பி.காம் பட்டதாரியான இவர், கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமணத்துக்காக செல்வம்-கல்பனா இருவரும் சென்றுவிட்டனர். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது கல்பனா, தனது மகனுக்கு போன் செய்தார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் பயந்துபோன சீனிவாசனின் பெற்றோர், அவசர அவசரமாக சென்னை திரும்பி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. வெகு நேரமாக தட்டியும் சீனிவாசன் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தங்கள் மகன் சீனிவாசன், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது இடது கை மணிக்கட்டு பகுதியிலும் கத்தியால் அறுத்து உள்ளார். கையில் இருந்தும் ரத்தம் கொட்டி இருந்தது.

இதுபற்றி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? எனவும், அவருடைய செல்போனில் கடைசியாக யாரிடம் பேசினார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story