மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம்


மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Sep 2021 8:16 PM GMT (Updated: 13 Sep 2021 8:16 PM GMT)

சுவாமிமலை சுவாமிநாதசாமி் கோவிலில் மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.

கபிஸ்தலம்:
சுவாமிமலை சுவாமிநாதசாமி் கோவிலில் மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
மணிப்பூர் கவர்னர் சாமி தரிசனம்
அறுபடை வீடுகளின் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவிலுக்கு மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் நேற்று வந்தார். அங்கு அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
குலதெய்வத்தை வணங்குவதற்காக
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவில் எனது குலதெய்வம். அதனால் எனது குலதெய்வத்தை வணங்குவதற்காக  வருகை தந்தேன். மேலும் நேர்த்திக்கடன் ஒன்று இருந்ததை நிவர்த்தி செய்யும் வண்ணம் இங்கு வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினேன்.
தொடர்ந்து சொந்த ஊரான மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை அடுத்த மகாராஜபுரத்தில் உள்ள கிராம கோவிலில் தரிசனம் செய்ய செல்வதாகவும் கூறினார்.
எல்லை பிரச்சினை இல்லை
மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் மிக அழகான மாநிலம் ஆகும்.  பாரதத்தின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் பண்பாடு மிக்கவர்கள். கலைகளுக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த மாநிலத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை. எல்லையை ஒட்டி பக்கத்தில் உள்ள நாடு பர்மா. அந்த நாடு நமது நட்பு நாடு என்பதால் எல்லை பிரச்சினை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மணிப்பூர் கவர்னர் இல.கணேசனை, சுவாமிநாதசாமி கோவில் துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், தஞ்சை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள், சுவாமிமலை வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Next Story