ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் - நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை


ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் - நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2021 3:17 PM GMT (Updated: 21 Sep 2021 3:17 PM GMT)

நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் முட்டி போட்டும், ஒற்றை காலில் நின்றபடியும், சிலர் தரையில் படுத்து உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது மழை பெய்வதால் அறுவடை செய்த நெல்மணிகள் நனைந்து முளைத்து வருவதால் நெல் கொள்முதல் பணியை துரிதப்படுத்த வேண்டும். ஈரப்பதத்தை 17 சதவிதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் விவசாயிகள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தற்சமயம் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை நெல் அறுவடை செய்து வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த ஊர் சிட்டா அடங்கல் வாங்கும் விவசாயிகள் அந்தந்த ஊரிலேயே நெல்லை போட வேண்டும். வேறொரு ஊர் சிட்டா, அடங்கல் வாங்கி கொண்டு நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரக்கூடாது.

வியாபாரிகள் நெல் போடுவதை தடுக்கவே அந்தந்த ஊரிலேயே சிட்டா அடங்கல் வாங்கி கொண்டு அந்தந்த ஊரிலேயே நெல்லை போட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை அதிகஅளவில் நடைபெற்று கொண்டிருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகஅளவில் திறக்க வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 1,200 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story