தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து ரூ.8¼ லட்சம் மோசடி


தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து ரூ.8¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Sep 2021 1:11 PM GMT (Updated: 22 Sep 2021 1:11 PM GMT)

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து ரூ.8¼ லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ.8Ð லட்சம் மோசடி செய்தவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:&
மோசடி
தூத்துக்குடியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 49) . ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைனில் உடைகள் மற்றும் ஷூக்கள் வாங்குவதற்காக பணம் செலுத்தினாராம். ஆனால் பொருட்கள் வரவில்லை. இதனால் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது விரைவில் திருப்பி அனுப்புவதாகவும், அதற்காக சில செயலிகளை பதிவிறக்கம் செய்து இயக்க வேண்டும் என்றும் கூறினாராம். இதனை நம்பிய மோகன்குமார் அந்த செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து இயக்கினாராம். சிறிது நேரத்தில் மோகன்குமார் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 91 பணம் எடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்குமார் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு வழக்கு
இதே போன்று சாத்தான்குளம் சொக்கலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35) . ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு இருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த சக்திவேல், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர் என்று கூறியவர், ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து இயக்குமாறு கூறி உள்ளார். அதன்படி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து இயக்கி, அதில் ரூ.300 முதலீடு செய்தாராம். இதனால் அவருக்கு ரூ.372 பணம் கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சக்திவேல் ரூ.99 ஆயிரம் முதலீடு செய்து உள்ளார். ஆனால் அவருக்கு எந்தவித பணமும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்திவேல் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story