மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 Oct 2021 8:16 PM GMT (Updated: 5 Oct 2021 8:16 PM GMT)

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் மதுசூதன் ரெட்டி தகவல்

சிவகங்கை
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரமும், இளங்கலை பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6 ஆயிரமும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரமும் ஆண்டொன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகல் (40 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்) ஆகிய விவரம் இணைக்க வேண்டும். 
10-ம் வகுப்பு மாணவர்கள்
மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும். பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதிவு கடந்த 4-ந்தேதி முதல் 18-ந்்தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்களது பள்ளிக்கு எடுத்து வர வேண்டும். மேலும், என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story