வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்


வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்
x
தினத்தந்தி 10 Oct 2021 6:14 AM GMT (Updated: 10 Oct 2021 6:14 AM GMT)

குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

பூந்தமல்லி,

புதியதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் காஞ்சீபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட 3 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லசேரி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக வந்த தகவலையடுத்து, அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.

இதையடுத்து அ.தி.மு.க.வினரை பார்த்ததும் தி.மு.க.வினர் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

மேலும் அங்கு வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் கொடுத்த மூக்குத்திகளை அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக கூறி அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தார். பின்னர் இதுகுறித்து அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் பரிசு பொருட்கள் வழங்காமல் இருக்க அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

Next Story