இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை


இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2021 8:41 PM GMT (Updated: 11 Oct 2021 8:41 PM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

பெரம்பலூர்:

வாக்கு எண்ணிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு காரணமாக காலியாக இருந்த பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு, வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு, ஆடுதுறை ஊராட்சி 4-வது வார்டு ஆகிய 3 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் மொத்தம் 77.42 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 6 அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல் பிரிவு) மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஓலையூர், நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், ஒட்டக்கோவில் 6-வது வார்டு, வெற்றியூர் 6-வது வார்டு, கோவிலூர் 1-வது வார்டு, தளவாய் 9-வது வார்டு, சிறுகடம்பூர் 3-வது வார்டு, ஜெ.தத்தனூர் 5-வது வார்டு, இடையக்குறிச்சி 2-வது வார்டு, இலையூர் 9-வது வார்டு, அம்பாபூர் 8-வது வார்டு ஆகிய ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நடந்த தற்செயல் தேர்தலில் மொத்தம் 78.68 சதவீத வாக்குகள் பதிவானது.
இதையடுத்து வாக்குகள் அடங்கிய பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஒன்றிய அலுவலங்களில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்படுகிறது. இந்த பணியில் 27 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தா.பழூர்
தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு ஏற்படுத்தி வேட்பாளர்களின் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story