ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில்  மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2021 6:07 PM GMT (Updated: 12 Oct 2021 6:07 PM GMT)

பால்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி வாக்கு எண்ணிக்கை மையத்தை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

ஊராட்சி மன்ற தலைவர் பதவி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பால்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும், பெரியசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி ஒன்றியம் மேலூரில் உள்ள டி.எஸ்.எம்.ஜெயின் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் சுப்பிரமணியனை விட பெரியாசாமி 16 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஆர்ப்பாட்டம்

இதனை அறிந்த சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டு பால்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.  

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கிராமமக்கள் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story