மாவட்ட கவுன்சிலர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி-10 பேர் டெபாசிட் இழந்தனர்


மாவட்ட கவுன்சிலர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி-10 பேர் டெபாசிட் இழந்தனர்
x
தினத்தந்தி 12 Oct 2021 6:15 PM GMT (Updated: 12 Oct 2021 6:15 PM GMT)

நாமக்கல் மாவட்ட 6-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 10 பேர் டெபாசிட் இழந்தனர்.

வெண்ணந்தூர்:
மாவட்ட கவுன்சிலர் தேர்தல்
மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். 43 ஆயிரத்து 464 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் எண்ணும் பணி வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் 12 வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் துரைசாமி 10 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணன் 2 வாக்குகள் பெற்றனர். தொடர்ந்து வாக்குப்பெட்டிகளில் போடப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மொத்தம் 12 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளரான துரைசாமியே முன்னிலை வகித்தார். 6-வது சுற்றின் முடிவில் துரைசாமி 16 ஆயிரத்து 306 வாக்குகளும், கண்ணன் 6 ஆயிரத்து 567 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. வேட்பாளர் துரைசாமி 28 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணன் 12 ஆயிரத்து 983 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 477 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. துரைசாமி 15 ஆயிரத்து 809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட வெண்ணந்தூரில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
10 பேர் டெபாசிட் இழப்பு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணன் 439 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் மாரியப்பன் 413 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் சாந்தி 213 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் கோபால் 67 வாக்குகளும் பெற்றனர்.
தோல்வி அடைந்த வேட்பாளர்களில் அ.தி.மு.க. வேட்பாளரை தவிர மற்ற 10 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வெற்றி பெற்ற துரைசாமிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியா சான்றிதழை வழங்கினார். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்,  முன்னாள் எம்.பி. சுந்தரம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story