தேர்தல் முடிவு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி விழுப்புரத்தில் விடிய, விடிய பொதுமக்கள் மறியல் வாக்கு எண்ணும் மையத்தையும் முற்றுகையிட்டனர்


தேர்தல் முடிவு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி விழுப்புரத்தில் விடிய, விடிய பொதுமக்கள் மறியல்  வாக்கு எண்ணும் மையத்தையும் முற்றுகையிட்டனர்
x

தேர்தல் முடிவு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி வெவ்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் வீரமூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இளவரசி ஜெய்சங்கர் என்பவர் வெற்றி பெற்றதாகவும், ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பின்போது அவர் தோல்வியடைந்து விட்டதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டதாக கூறி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேட்பாளர் இளவரசி ஜெய்சங்கரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு திரண்டு வந்தனர்.

அங்கு நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கக்கோரி அவர்கள் முறையிட்டனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு நள்ளிரவு 12 மணியளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறியும், அதை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

முற்றுகை

உடனே அவர்களிடம் அங்கிருந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு நேர்மையான முறையில் முடிவை அறிவிக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். மேலும் மாவட்ட கலெக்டர் இங்கு உடனடியாக வர வேண்டுமென்றும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர்.

இவர்களின் போராட்டம் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 5 மணி வரை நீடித்தது. அதன் பிறகும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது இப்பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடும்படி கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் அதிகாலை 5.15 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு நேற்று அவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு கொடுத்தனர்.

திருப்பாச்சனூர்

இதேபோல் கோலியனூர் ஒன்றியம் திருப்பாச்சனூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லட்சுமிநாராயணன் வெற்றி பெற்றதாகவும், ஆனால் அவர் தோல்வியடைந்து சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறியும், இதனை கண்டித்தும், லட்சுமிநாராயணனை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரியும் அவரது ஆதரவாளர்கள்,

 பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அமர்ந்து நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 5.30 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் அதிகாலை 5.30 மணியில் இருந்து விழுப்புரம் காந்தி சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

மீண்டும் போராட்டம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து காலை 6.15 மணியளவில் கலைந்து போகச்செய்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

பின்னர் இவர்கள் அனைவரும் காலை 9.15 மணியளவில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையில் அமர்ந்து மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் 9.30 மணியளவில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று புகார் மனு கொடுத்தனர்.

அதனூர்

மேலும் அதனூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரேவதி சீனு வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றியை அறிவிக்காமல் நிறுத்தி வைத்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை 9.45 மணியளவில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தியதன்பேரில் அவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த தொடர் போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story