கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 7 லட்சம் நகை பணம் கொள்ளை


கள்ளக்குறிச்சியில்  ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 7 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Oct 2021 5:29 PM GMT (Updated: 18 Oct 2021 5:29 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் வீட்டில் ரூ 7 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்


கள்ளக்குறிச்சி

ஆசிரியர்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் தேவவிஜயகுமார்(வயது 46). இவர் அருகில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தேவவிஜயகுமார் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான 2 வீடுகளில் ஒரு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டில் தனது தந்தை மற்றும் மனைவி, பிள்ளைகளுடன் படுத்து தூங்கினார்.

நகை பணம் கொள்ளை

பின்னர் நேற்று காலை எழுந்து பூட்டியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம், பட்டுப்புடவை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் கொள்ளையர்கள் சமையலறையில் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு சென்றுள்ளனர். 

வலைவீச்சு-

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் பீரோ, கதவில் உள்ள ரேகைகளை பதிவுசெய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
பின்னர் இது குறித்து தேவவிஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story