மீண்டும் குண்டும், குழியுமான சூண்டி-ஆரோட்டுப்பாறை சாலை


மீண்டும் குண்டும், குழியுமான சூண்டி-ஆரோட்டுப்பாறை சாலை
x
தினத்தந்தி 22 Oct 2021 1:25 PM GMT (Updated: 22 Oct 2021 1:25 PM GMT)

சீரமைத்து 2 ஆண்டுகளே ஆகும் நிலையில் சூண்டி-ஆரோட்டுப்பாறை சாலை மீண்டும் குண்டும், குழியுமானது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கூடலூர்

சீரமைத்து 2 ஆண்டுகளே ஆகும் நிலையில் சூண்டி-ஆரோட்டுப்பாறை சாலை மீண்டும் குண்டும், குழியுமானது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை 

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சூண்டியில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. 

ஆனால் சுண்ணாம்பு பாலம் உள்பட பல இடங்களில் தார்சாலை பழுதடைந்து மீண்டும் குண்டும், குழியுமாக மாறி விட்டது.
மேலும் சுண்ணாம்பு பாலம் கரையோரம் பள்ளம் உருவாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன விபத்துக்களும் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

நடவடிக்கை இல்லை

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அகலம் குறைந்த சாலை என்பதால் ஒரு பஸ் செல்லும் வகையில் மட்டுமே இடம் உள்ளது.

இதனால் பள்ளத்தை சரி செய்யவில்லை எனில் விரிசல் அதிகரித்து சாலையில் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் சுண்ணாம்பு பாலம் மட்டுமின்றி மரப்பாலம், செல்வபுரம், பாரதிநகர், ஆரோட்டுப்பாறை, திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர் உள்பட 7 கிராம மக்கள் அவதிப்படும் நிலை காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்கு முன்பு குண்டும், குழியுமாக கிடந்த தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது தவிர சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு நாளுக்கு நாள் அப்பகுதி உடைந்து வருகிறது. இதனால் அரசு பஸ் உள்பட அனைத்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படும்.

அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கூடலூருக்கு சென்று திரும்ப முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story