தண்டராம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது


தண்டராம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது
x
தினத்தந்தி 22 Oct 2021 4:14 PM GMT (Updated: 22 Oct 2021 4:14 PM GMT)

தண்டராம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஓட்டையும் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. ஓட்டையும் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஆனால் தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.

தண்டராம்படடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 28 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 16 பேர் தி.மு.க.வினர். 12 பேர் அ.தி.மு.க.வினர். 3 முறை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இதனால் கடந்த 1½ ஆண்டுகளாக தண்டராம்பட்டு ஒன்றியத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இல்லாமல் நிர்வாகம் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் தலைவர், துணைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 4 வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

அதன்படி இன்று காலை தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. 

தி.மு.க. வெற்றி

தி.மு.க. சார்பில் 27-வது வார்டு உறுப்பினர் பரிமளாகலையரசு போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் வினோதினி போட்டியிட்டார். 

தேர்தல் மாவட்ட திட்ட உதவி இயக்குனர் (உட்கட்டமைப்பு) ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

தேர்தலை கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் கண்காணித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன் ஆகியோர் ஏற்பாட்டில்  வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பரிமளா கலையரசு 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வினோதினிக்கு எதிராக 2 அ.தி.மு.க. உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பூங்கொடி நல்லதம்பியும், அ.தி.மு.க. சார்பில் கார்த்திகேயனும்   போட்டியிட்டனர். இதில் பூங்கொடி நல்லதம்பி 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


Next Story