போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 Oct 2021 8:33 PM GMT (Updated: 27 Oct 2021 8:33 PM GMT)

நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
நெல்லையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பணிச்சுமை காரணம் என மகன் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை டவுனை சேர்ந்தவர் பழனி (வயது 51). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நெல்லை சந்திப்பில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று திரும்பிய பழனி வீட்டில் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பழனி பரிதாபமாக இறந்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பழனியின் மனைவி முத்துலட்சுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் இறந்து விட்டார். இதனால் பழனி வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசாமல் சோகத்துடன் இருந்து வந்தார். மேலும் சமீபத்தில் பழனி விருப்ப ஓய்வு பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை கேட்டும், அதிகாரிகள் தரவில்லை என்று பழனி சகபணியாளர்களிடம் கூறியுள்ளார். எனவே, மனைவி இறந்த விரக்தியில் அவர் தற்ெகாலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனரிடம் மகன் மனு

இதற்கிடையே, பழனியின் மகன் சுதாகரன் (21) நேற்று மாலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்தாா். அங்கு கமிஷனர் செந்தாமரைக்கண்ணனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறிஇருப்பதாவது:-
என்னுடைய தந்தை போலீஸ் துறையில் நேர்மையாக பணிபுரிந்து வந்தார். ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் அதிகாரியின் துன்புறுத்தலால் 3 மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்காக மனு கொடுத்திருந்தார். இதனால் கோபம் அடைந்த அதிகாரி ஒருவர், என்னுடைய தந்தையை அவமானப்படுத்தி உள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அதிக வழக்குப்பதிவு செய்யும்படி, அதிகமாக அபராதம் விதித்து பணம் வசூலிக்கும்படியும் பணிச்சுமையை ஏற்படுத்தி உள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். எனவே, தற்கொலைக்கு தூண்டிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறிஉள்ளார்.
இதற்கிடையே, பழனியின் உடலை குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று வாங்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story