பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு: கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 5:47 PM GMT (Updated: 22 Nov 2021 5:47 PM GMT)

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை:
குளிர்பானத்தில் மயக்க மருந்து
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மறவாமதுரை பக்கம் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 
இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனவுடன், அதை கலைக்க மருத்துவமனைக்கும் சென்றார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் இருந்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 7-ந் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
சாகும்வரை ஆயுள் தண்டனை
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.50 ஆயிரமும், அபராத தொகையை கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ.20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மேலும் சிறுமிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்து, அந்த குழந்தைக்கு 1¼ வயது ஆவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story