பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 22 Nov 2021 6:05 PM GMT (Updated: 22 Nov 2021 6:05 PM GMT)

சி.ஐ.டி.யு.வினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி:
பொன்னமராவதி போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர், சி.ஐ.டி.யு. சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கிளை செயலாளர் கே.கண்ணன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தி பேசினார். ேபாராட்டத்தில் போக்குவரத்துக் கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் நிறைவுரை ஆற்றினார். இதில் கிளை நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story