‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 7:26 PM GMT (Updated: 24 Nov 2021 7:26 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ரேஷன் கடையை சூழ்ந்த வெள்ளம்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூரில் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாசன ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வழிந்து உபரிநீர் குடியிருப்புகளுக்கு புகுந்தது. மேலும், ரேஷன் கடையில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லதா, இனாம்குளத்தூர், திருச்சி.
பன்றிகளால் சுகதார சீர்கேடு
திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சகஜமாக சுற்றித்திரிவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதவள்ளி, திருச்சி.
குப்பைகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட், சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகே செல்லும் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால், திருச்சி.
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அப்பாத்துறை ரோடு தாளக்குடி தெற்கு தெருவில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வித்யா, திருச்சி.
மழையால் சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பிரதான சாலையான கடைவீதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக பஸ் நிலையம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையுள்ள சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், திருச்சி.
நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 22-வது வார்டு தோப்புத்தெரு பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதால் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வள்ளி, தோப்புத்தெரு, திருச்சி.
மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் எதிரே உள்ள திருமண மண்டபம் அருகே உள்ள மின்கம்பம் இரண்டாக உடைந்த நிலையில் உள்ளதால் எந்நேரத்திலும் கீழே விழலாம் என்ற சூழ்நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
திவ்யா, திருச்சி.

Next Story