அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி கணவன்-மனைவி படுகாயம்
அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.
சென்னை,
சென்னை அடையாறு அருணாசலபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் லலித்குமார் (வயது 34). இவருடைய மனைவி சுனிதா (29). நேற்று முன்தினம் இரவு லலித்குமார் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அடையாறில் இருந்து அண்ணாசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கிரேன் வாகனம், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த லலித்குமார் மீது கிரேன் சக்கரம் ஏறி இறங்கியதில், அவரது வலது கால் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. பின்னால் உட்கார்ந்திருந்த அவருடைய மனைவி சுனிதாவுக்கு முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த கணவன்-மனைவி இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஆபரேட்டரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story