வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் சேலத்தில் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது


வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் சேலத்தில் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 25 Nov 2021 9:04 PM GMT (Updated: 25 Nov 2021 9:04 PM GMT)

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் சேலத்தில் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்துள்ளது.

சேலம்
வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையால் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்தது. 
சேலத்தில் கடந்த 22-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது மழை ஓரளவுக்கு குறைந்து இருப்பதால் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சேலம் ஆற்றோர காய்கறி மார்க்கெட் மற்றும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று தக்காளி வரத்து அதிகளவில் இருந்தது.
தக்காளி விலை குறைந்தது
சேலம் மார்க்கெட்டிற்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை அதிகமாக மொத்த வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். 
இதனால் மொத்த விலையாக 25 கிலோ எடை கொண்ட பெட்டி (ஒரு கிரேடு) ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் சில்லரை விலையாக ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.70 வரைக்கும் விற்கப்பட்டது. உச்சத்தை தொட்ட தக்காளி விலை தற்போது குறைந்ததால் சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில் நேற்று தக்காளி கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெளி மார்க்கெட்டுகளிலும், மளிகை கடைகளிலும் போதுமான அளவில் தக்காளி இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆப்பிளோடு போட்டி போட்டு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை தற்போது குறைந்திருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் தக்காளியை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Next Story