தேவர்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


தேவர்குளம் அருகே  மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 7:56 PM GMT (Updated: 2 Dec 2021 7:56 PM GMT)

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கட்டிட தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தென்காசி மாவட்டம் முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வேலையா (வயது 65), மாடசாமி (60), சத்தியமூர்த்தி (45) ஆகிய 3 பேரும் கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றினர்.
நேற்று புதிய கட்டிடத்துக்கு கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக சென்டிரிங் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது வேலையா உள்ளிட்ட 3 பேரும் இரும்பு கம்பிகளை கட்டிட மேற்கூரைக்கு தூக்கினர். அப்போது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உரசியதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கி பலி
இதில் மின்சாரம் தாக்கியதில் வேலையா, மாடசாமி, சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வேலையா பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மாடசாமி, சத்தியமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின்பேரில், தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story