குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2021 7:18 PM GMT (Updated: 3 Dec 2021 7:18 PM GMT)

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திருமங்கலம்,

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேன் டிரைவர்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் மாரீசுவரி (வயது 26). இவருக்கும் நெல்லையை சேர்ந்த மகேந்திரன் (31) என்பவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுடைய குழந்தை கனிகாஸ்ரீ (1).
மகேந்திரன் திருப்பூரில் வேன் டிரைவராக உள்ளார். திருமால் புதுப்பட்டியில் தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்து மாரீசுவரி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

குழந்தையுடன் தற்கொலை

இதனால் மனவருத்தம் அடைந்த மாரீசுவரி நேற்று முன்தினம் இரவு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை மாரீசுவரியின் குழந்தை கனிகாஸ்ரீ அணிந்திருந்த வளையல் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணறு பகுதியில் கிடந்தது.
இதைக்கண்டு பதறிய உறவினர்கள் கிணற்றுக்குள் குழந்தை விழுந்து இருக்கலாம் என கருதி கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடியபோது மாரீசுவரி, கனிகாஸ்ரீ ஆகிய 2 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

 உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாரீசுவரி தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொைல செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது குறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----

Next Story