கரூரில் ஒரேநாளில் 34 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில் ஒரேநாளில் 34 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Dec 2021 6:59 PM GMT (Updated: 4 Dec 2021 6:59 PM GMT)

கரூரில் நேற்று ஒரேநாளில் 34 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர், 
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 13-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் மொத்தம் 502 இடங்களில் நேற்று நடைபெற்றது.
முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றன. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர்.
அதேபோல் சுகாதாரத்துறையினர் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு  நேரடியாக சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
88 சதவீத பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 34 ஆயிரத்து 877 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 5 ஆயிரத்து 29 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 39 ஆயிரத்து 906 பேர் செலுத்தி இருந்தனர்.
நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 15 ஆயிரத்து 400 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 548 பேருக்கும் என மொத்தம் 34 ஆயிரத்து 948 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை தடுப்பூசி 88 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 50 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

Next Story