ஏ.டி.எம். மையத்திற்கு வந்தவர்களிடம் நூதனமுறையில் பணமோசடி செய்த பெண் கைது


ஏ.டி.எம். மையத்திற்கு வந்தவர்களிடம் நூதனமுறையில் பணமோசடி செய்த பெண் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 7:37 PM GMT (Updated: 7 Dec 2021 7:37 PM GMT)

ஏ.டி.எம். மையத்திற்கு வந்தவர்களிடம் நூதனமுறையில் பணமோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

பணமோசடி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அதே தெருவில் 5-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. இந்த மையங்களுக்கு வயதானவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என ஏராளமானோர் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வாறு பணம் எடுக்க ேவண்டும் என்பது தெரியாததால், அவர்களது அறியாமையை பயன்படுத்தி ஏ.டி.எம். கார்டுகளை மாற்றிக் கொடுத்து, அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி நடப்பதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தவாறு இருந்தன.
மேலும் நேற்று முன்தினம் கல்லாத்தூர் வடவீக்கம் வடக்கு தெருவை சேர்ந்த அழகேசனின் மனைவி விஜயசாந்தி(வயது 26) என்பவர் தனது மகன்களுக்கு புதிதாக ஆதார் அட்டை வாங்க ஜெயங்கொண்டத்திற்கு வந்தபோது, தான் கொண்டு வந்த ஏ.டி.எம். அட்டையை காணவில்லை என்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து...
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான மணிவண்ணன், மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சன்னதி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நீண்ட நேரமாக ஒரு ஏ.டி.எம். மைய வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்ததால், அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா வெள்ளூரை சேர்ந்த சரவணனின் மனைவி உமாமகேஸ்வரி(வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வரும் படிப்பறிவில்லாத மற்றும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து, அவர்களது ஏ.டி.எம். கார்டை பெற்று, பின்னர் அவர்களிடம் வேறொரு ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்ததும், மேலும் அவர்களது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பெண் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரியை கைது செய்தனர். மேலும் அவர் எத்தனை பேரை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுத்துள்ளார். அந்த பணத்தை எங்கு வைத்துள்ளார்? என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் உமா மகேஸ்வரியை சிதம்பரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த ரூ.18 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை மீண்டும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story