ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடு வாடிவாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு


ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடு வாடிவாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
x
தினத்தந்தி 13 Jan 2022 2:43 PM GMT (Updated: 13 Jan 2022 2:43 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் வாடிவாசல் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வாடிவாசல் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று கால்நடை மருத்துவர்களால் காளைகள் பரிசோதிக்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளுக்கு போதிய உணவு, குடிநீர் வழங்க வேண்டும். காளை அருகில் அதன் உரிமையாளர் இருக்க வேண்டும். வாடிவாசலின் முகப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காளை அடக்கும் நிகழ்வு நடைபெறும் இடம் முழுவதும் படம்பிடிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்த வேண்டும்.
அடையாள அட்டை
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட வீரர்களை தனிமைப்படுத்தி காட்டுவதற்காக அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிறப்பு உடை வழங்க வேண்டும். இளைஞர்கள் காளையின் திமிலை மட்டுமே பிடித்து அடக்கவேண்டும்.
மேலும் 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் அல்லது 3 துள்ளல் துள்ளும் வரை மட்டுமே காளைகளை அடக்கவேண்டும். மாடுபிடி வீரர்கள் காளையின் வால் மற்றும் கொம்பை பிடிக்கக்கூடாது, விதிகளை மீறும் மாடுபிடி வீரர்கள் தொடர்ந்து ஜல்லிகட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பார்வையாளர் அரங்கம் 
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் நார்களை தரையில் பரப்ப வேண்டும். வாடிவாசலில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் மட்டுமே பார்வையாளர் அரங்கம் அமைக்க வேண்டும். வாடிவாசலில் இருந்து காளை அடக்கும் தூரமான 15 மீட்டரை கடந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தொடக்கூடாது.
ஜல்லிகட்டு முடிந்த பின் வாடிவாசலில் இருந்து குறைந்தது 100 மீட்டர் தூரமாவது காளை ஓடுமளவிற்கு இடமளிக்கவேண்டும். பார்வையாளர் அமர்ந்து பார்க்க அரங்கத்தை அமைக்க வேண்டும். அதன் உறுதித்தன்மை பொதுப்பணித்துறை மூலம் உறுதி செய்யப்படும். காளைகள், பார்வையாளர்களை தாக்காமல் இருக்கும் வகையில் வாடிவாசலில் இருந்து காளை சென்று சேரும் கொட்டகை வரை 8 அடி உயரத்தில் இரண்டு அடுக்கு தடுப்பு அமைக்கவேண்டும். தேவைப்படும்போது காளைகளை உடனடியாக வெளிக்கொண்டு வர அவசர வழியை கண்டிப்பாக ஏற்படுத்தவேண்டும்.
மருத்துவ பரிசோதனை
கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டில் பங்குபெறும் அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டில் பங்கேற்க உடல் ரீதியாக தகுதியான நபர்தான் என்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காயமடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story