திருச்செந்தூரில் 218 பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கல்


திருச்செந்தூரில் 218 பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கல்
x
தினத்தந்தி 13 Jan 2022 3:05 PM GMT (Updated: 13 Jan 2022 3:05 PM GMT)

திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் 218பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் 218பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருமண நிதியுதவி
திருச்செந்தூர் யூனியன் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சமூக நல மாவட்ட கண்காணிப்பாளர் ஹேமலதா வரவேற்று பேசினார். திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட 218 பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பழனி கார்த்திகேயன், அந்தோணி பன்னீர் செல்வன்,
தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், யூனியன் தலைவர்கள் பாலசிங் (உடன்குடி), ஜனகர் (ஆழ்வார்திருநகரி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.  சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயசீல ஜான்சிராணி நன்றி கூறினார்.
உடன்குடி
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் தலைமையில் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் மு.கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், உடன்குடி யூனியன்குழு தலைவர் டி.பி.பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் வரவேற்றார்.
அமைச்சர் 
தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில்,‘ நோய்களின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முயல வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். கோரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவம் சுகாதாரத்தில் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசின் கோரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று அவர் பேசினார். 
கலந்து கொண்டவர்கள்
இதில், தி.முக. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி மற்றும் திரளான மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்பணர்வு, சத்தான ஊணவுகள், சத்து நிறைந்த காய்கறி ஊணவுகள் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

Next Story