பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:43 PM GMT (Updated: 13 Jan 2022 4:43 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கடலூரில் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பானைகள், பொங்கலுக்கு பெயர் போன கரும்புகள், மஞ்சள் கொத்து உள்ளிட்டவை கடைவீதிகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன. அந்த வகையில் கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையோரம் நேற்று முன்தினம் இரவே ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள், கரும்புகள், மஞ்சள் கொத்துகள் கொண்டு வந்து விற்பனைக்காக குவிக்கப்பட்டன. இதையடுத்து கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கே கடலூர் நகருக்கு படையெடுத்து வந்தனர்.

உழவர் சந்தை

பின்னர் அவர்கள் கடலூர் உழவர் சந்தை முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைத்தார், கரும்பு, மஞ்சள் கொத்துகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை விலை போனது.
மேலும் ஒரு ஜோடி கரும்பு ரூ.60 முதல் ரூ.80 வரையும், மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதில் கடலூர் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட சுமார் 60 டன் காய்கறிகளில் நேற்று ஒரே நாளில் 40 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், வண்டிப்பாளையம் சாலை, கூத்தப்பாக்கம் சாலை, மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலை, அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கரும்பு, மஞ்சள் மற்றும் சிறுகிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த பொருட்களை கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடலூர் நகரில் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பொருட்களை வாங்க முக்கிய சாலைகளில் பொதுமக்கள் குவிந்ததால், கடலூர் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் லாரன்ஸ் சாலை, திருப்பாதிரிப்புலியூர்-கூத்தப்பாக்கம் சாலை, இம்பீரியல் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.
இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததை காண முடிந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் எங்கு பார்த்தாலும் திருவிழா கூட்டம் போல், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து, பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story