சாலையோர கடைகள் அகற்றம்


சாலையோர கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 Jan 2022 6:04 PM GMT (Updated: 13 Jan 2022 6:04 PM GMT)

மதுரை அரசரடி பகுதியில் இருந்த சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

மதுரை
மதுரை அரசரடி ெரயில்வே மைதானத்தை ஒட்டிய சாலையோரத்தில் மாநகராட்சி அனுமதி பெற்று சுமார் 10-க்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளிகள் இரும்பு பெட்டி கடைகளை அமைத்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அந்த கடைகளுக்கு வழங்கி இருந்த அனுமதியை ரத்து செய்தது. மேலும், நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் அந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர்.
இதுகுறித்து அந்த இடத்தில் பணிகளை மேற்பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை ஐகோர்ட்டு அகற்ற உத்தரவிட்டதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு மாற்று இடம் தரப்படுவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் முடிவு செய்வார் என்றார்.
கடைகள் அகற்றப்பட்டது குறித்து அந்த இடத்தில் நீண்ட காலமாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த ராஜா என்பவர் கூறுகையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி அனுமதியுடன் கடை வைத்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த பணத்தை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தோம். மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த மாற்று இடம் தராமல் இந்த கடைகளை அகற்றி விட்டனர். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாநகராட்சி ஆணையாளர் உடனே நடவடிக்கை எடுத்து மாற்று இடம் தர வேண்டும் என்றார்.

Next Story