வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:55 PM GMT (Updated: 13 Jan 2022 8:55 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சாெர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ஈரோடு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 
சத்தியமங்கலம்
வைகுண்ட ஏகாதசி விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவிலில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. 
சத்தியமங்கலம் கடை வீதியில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கஸ்தூரி ரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி,க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 5.40 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் வேணுகோபாலசாமி எழுந்தருளினார். இதையடுத்து சொர்க்கவாசல் வழியாக சாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி கஸ்தூரி ரங்கநாதருக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. எளிய முறையில் நடந்த இந்த விழாவில் குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
கோபி
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோபி ஸ்ரீதேவி, பூதேவி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார். பின்னர் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக சாமி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமியை வழிபட்டு சென்றனர். 
மேலும் கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி, கரிவரதராஜ பெருமாள் கோவில், பச்சைமலை பெருமாள் கோவில், மொடச்சூர் பெருமாள் கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. 
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள அழகு ராஜ பெருமாள் கோவில், பருவாச்சி கரிய பெருமாள் கோவில், தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் அந்தியூ்ா, அத்தாணி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி
வைகுண்ட ஏகாதசியையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதையடுத்து 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் வெள்ளி கருட வாகனத்தில் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் உற்சவர் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அனுமதி அளித்தார். 
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, பின்னர் காலை 8 மணிக்கு சாமியை வழிபடுவதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கொளாநல்லி ஸ்ரீபூமி நீளா சமேத ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 
இதைத்தொடர்ந்து கருட வாகனத்தில் கரிவரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார், இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
துடுப்பதி
பெருந்துறை அருகே துடுப்பதியில் கரிய வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Next Story