பொங்கல் விழா ரத்தானதால் சுற்றுலா மையங்கள் களை இழந்தது


பொங்கல் விழா ரத்தானதால் சுற்றுலா மையங்கள் களை இழந்தது
x
தினத்தந்தி 15 Jan 2022 3:25 PM GMT (Updated: 15 Jan 2022 3:25 PM GMT)

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தாலும் பொங்கல் விழா ரத்தானதால் சுற்றுலா மையங்கள் களைஇழந்து காணப்பட்டது.

ஊட்டி

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தாலும் பொங்கல் விழா ரத்தானதால் சுற்றுலா மையங்கள் களைஇழந்து காணப்பட்டது. 
.
சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மலைகளின் அரசியான ஊட்டியில் கழிக்கவும், சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்தது. 

வார விடுமுறை என்பதால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் கடந்த வாரத்தை விட நேற்று சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பெரணி இல்லம், கல்லாகிய மரம், இந்திய வரைபடம், இலை பூங்கா, அலங்கார செடிகள் போன்றவற்றை கண்டு ரசித்தனர். பெரிய புல்வெளி மைதான புல்வெளிக்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், சாலை மற்றும் நடைபாதையில் நடந்து சென்ற படி பூங்காவை கண்டு ரசித்தனர். 

அதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. அங்கு பசுமையான புல்வெளியில் அமர்ந்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். 

அப்போது ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் தெளித்ததை பார்வையிட்டனர். 

பொங்கல் விழா ரத்து

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 1,973 பேர் வருகை தந்தனர். நேற்று 3,632 பேர் வந்தனர். 

வழக்கமாக சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் ஊட்டி படகு இல்லத்தில் பொங்கல் விழா நடைபெறும். இதில் சுற்றுலா பயணிகள் கலந்துகொள்வ தோடு, அவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும். 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு சாக்கு ஓட்டப்போட்டி, இசை நாற்காலி, பலூன் உடைத்தல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா மையங்கள் களையிழந்து காணப்பட்டது.


Next Story