தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Jan 2022 4:05 PM GMT (Updated: 15 Jan 2022 4:05 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடைபாதையில் கொட்டப்படும் குப்பைகள் 

நெல்லை பாளையங்கோட்டை 22-வது வார்டு மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி ரோடு, மாநகராட்சி பள்ளி எதிரில் பெரிய கழிவுநீர் சாக்கடையையொட்டி நடைபாதையில் சிலர் குப்பைகளை கொட்டிச் செல்கிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கும், குப்பை தொட்டி வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இஸ்மாயில், பாளையங்கோட்டை.

பூங்கா அமைக்கப்படுமா?

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் கிழக்கு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு பின்புறம் மற்றும் மேல்புறம் அரசின் காலிஇடங்கள் உள்ளது. அதில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து, அங்கு சிறுவர்கள் பூங்கா அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், கடம்பன்குளம்.

வீணாகும் குடிநீர் 

களக்காடு யூனியன் கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து சவளைக்காரன்குளம் ஊரில் நீர்த்தேக்க தொட்டி நிறைந்து தினமும் குடிநீர் ஆறாக தெருக்களில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் விரையம் ஆவது மட்டுமல்லாமல், அந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, சவளைக்காரன்குளம்.

தெருவில் தேங்கும் சாக்கடை நீர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா உடையாம்புளி நாராயணபுரம் தெருவில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தெருவில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை நீரை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்கிறேன்.
அன்புராஜ், உடையாம்புளி.

குடிநீர் குழாயில் உடைப்பு

கீழக்கடையம் பஸ் நிறுத்தம் அருகில் அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். பெரிய வாகனங்கள் செல்லும்போது பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை சாைலயோரத்தில் நடந்து செல்பவர்கள் மீது பீய்ச்சியடித்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆகவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
கோதர் மைதீன், முதலியார்பட்டி.

பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சுகள் 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் கோவில் பின்புறம் உள்ள காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிவும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் சிலர் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். எனவே பக்தர்கள் நலன் கருதி கோவிலில் மேற்கூரையை சீரமைக்கவும், காம்பவுண்டு சுவர் கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.


Next Story