பொங்கல்-தொடர் விடுமுறையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


பொங்கல்-தொடர் விடுமுறையையொட்டி  சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்  குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 15 Jan 2022 5:39 PM GMT (Updated: 15 Jan 2022 5:39 PM GMT)

பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி புகழ் பெற்ற சித்தன்னவாசலில் சுற்றுலா தலத்தில் பயணிகள் குவிந்தனர். படகு குளத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அன்னவாசல்:
சுற்றுலா தலம்
அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் உள்ளது. பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம், குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.
பூங்கா
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம், போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும், சித்தன்னவாசல் செல்பி பாய்ண்டில் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
படகு குளம்
சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம். ஆனால் கடந்தமுறை கொரோனா பாதித்தபோது படகுகுளம் மூடப்பட்டு பல மாதங்களாக திறக்காமல் இருந்தது. இதுகுறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் வெளியானது.
இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் படகுகுளம் திறக்கப்பட்டது. இதனையடுத்து சித்தன்னவாசலின் அழகை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் கோரிக்கை
சுற்றுலா பயணிகள் கூறுகையில், சுற்றுலா தலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை பொழுது கழிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை கொண்டுவந்து சாப்பிடும் சாப்பாட்டை உண்ணுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்று விடுகின்றன. மேலும் படகுகுளத்தில் போதுமான படகுகள் இல்லை. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கின்றோம். எனவே புதிய படகுகளை இயக்க வேண்டும். சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு இன்னும் பொருட்களை சேர்க்க வேண்டும். இசை நீரூற்றை திறக்க வேண்டும் என்றனர்.
ஜல்லிக்கட்டு காளை சிலை
சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் நுழைவுவாயிலில் புதிதாக ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அருகில் நின்று தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர்.

Next Story