முகநூல் மூலம் பழகி தர்மபுரி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டர் 8 மாத குழந்தையுடன் தெலுங்கானாவில் மீட்பு


முகநூல் மூலம் பழகி தர்மபுரி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டர்  8 மாத குழந்தையுடன் தெலுங்கானாவில் மீட்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 6:11 AM GMT (Updated: 17 Jan 2022 6:11 AM GMT)

முகநூல் மூலம் பழகி தர்மபுரி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். 8 மாத குழந்தையுடன் மாணவி தெலுங்கானாவில் மீட்கப்பட்டார்.

தர்மபுரி:
முகநூல் மூலம் பழகி தர்மபுரி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். 8 மாத குழந்தையுடன் மாணவி தெலுங்கானாவில் மீட்கப்பட்டார்.
ஜிம் மாஸ்டர்
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர். இந்தநிலையில் தர்மபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி வந்தார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். மேலும் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். 
சமூக வலைத்தளம் ஆய்வு
இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் சமூகவலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். மேலும் நரசிம்மனின் செல்போன் எண்ணை கொண்டு அவரை தேடி வந்தனர். 
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஷ்ணாபூரில் ஜிம் மாஸ்டர் நரசிம்மனை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பள்ளி மாணவியை கடத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அவர் கடத்திச்சென்றது தெரிய வந்தது.
கைது
மேலும், ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததும், தற்போது மாணவிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மனை போலீசார் கைது செய்தனர். 
தெலுங்கானாவில் இருந்த மாணவி மற்றும் அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story