ஏரியில் பிணமாக மிதந்த என்ஜினீயர்


ஏரியில் பிணமாக மிதந்த என்ஜினீயர்
x
தினத்தந்தி 17 Jan 2022 8:50 PM GMT (Updated: 17 Jan 2022 8:50 PM GMT)

ஏரியில் என்ஜினீயர் பிணமாக மிதந்தார்.

ஜெயங்கொண்டம்:

என்ஜினீயர்
அரியலூர் மாவட்டம் முன்னூரான்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த பட்டுசாமி-கம்சலை தம்பதியின் மகன் அழகேசன்(வயது 19). சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் குழந்தையாக இருந்தபோதே கம்சலையும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுசாமியும் இறந்து விட்டனர். இதனால் அழகேசன் தனது பெரியம்மா கவுசல்யா என்பவருடைய குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மேலும் அவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக சிலருடன் முன்விரோதம் இருந்ததாகவும், அந்த பெண்ணை வேறொருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்நிலையில் முன்னூரான்காடுவெட்டியில் உள்ள ஆசனேரியில் நேற்று அழகேசன் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழகேசனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அழகேசன் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டதாக கூறி, சந்தேகத்தின்பேரில் ஒரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஷாகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர் சுபா உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபரை கைது செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் வேன்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், பொதுமக்கள் கூறுவது போல் சந்தேகத்தின்பேரில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், விசாரணை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரேத பரிசோதனை முடிந்து, முடிவு வந்த பின்னர் கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்று போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக ஏராளமான பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் 2 பக்கங்களிலும் நிறுத்தப்பட்டதால் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story