ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 19 Jan 2022 4:56 PM GMT (Updated: 19 Jan 2022 4:56 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளன. விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளன. விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
நெல் கொள்முதல் நிலையங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களில் ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளன. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
ஈரோடு வட்டாரத்தில் வைராபாளையத்திலும், பெருந்துறை வட்டாரத்தில் பெத்தாம்பாளையத்திலும் ஏற்கனவே கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அம்மாபேட்டை வட்டாரத்தில் பூதப்பாடி, பவானி வட்டாரத்தில் மைலம்பாடி, கோபி வட்டாரத்தில் நாதிபாளையம், கொடுமுடி ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அங்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்பனை செய்யலாம்.
இணையதளம்
நெல் விற்பனை செய்ய விவசாயிகள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு கணிணி மூலமாகவோ அல்லது பொது இ-சேவை மையங்கள் மூலமாகவோ https://tncsc-edpc.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் சுயவிபரம், நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ள நிலத்தின் விவரம், பரப்பளவு, எதிர்பார்க்கும் மகசூல், கொள்முதல் நிலையத்துக்கு நெல் கொண்டு வரும் உத்தேச தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்று ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு உறுதி செய்யப்பட்ட விவரம், நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நாள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள் அந்த நிலையங்களுக்கு சென்று நெல் விற்பனை செய்து கொள்ளலாம்.
 எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர்கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story