இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பில் கதை சொல்லி அசத்தும் கறம்பக்குடி மாணவர்கள் தாத்தா, பாட்டிகளுக்கு மவுசு கூடியது


இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பில் கதை சொல்லி அசத்தும் கறம்பக்குடி மாணவர்கள் தாத்தா, பாட்டிகளுக்கு மவுசு கூடியது
x
தினத்தந்தி 20 Jan 2022 4:52 PM GMT (Updated: 20 Jan 2022 4:52 PM GMT)

கறம்பக்குடியில் இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்பில் மாணவர்கள் கதை சொல்லி அசத்தி வருகின்றனர். இதனால் தாத்தா, பாட்டிகளுக்கு மவுசு கூடி உள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

கறம்பக்குடி:
கற்பனை கதைகள் 
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அவர் மகளை ஒரு மந்திரவாதி தூக்கிகிட்டு போய் ஏழு கடலுக்கு அப்பால் வச்சிட்டாராம். அந்த பெண்னை ஒரு பூதம் மீட்டுக்கொண்டு வந்துச்சாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சின்ன வயதில் இப்படி கதை கேட்டு வளர்ந்தவர்கள் அதிகம். பேசாத உலகம் பேசுவது போன்றும், ஏழு கடல்களை இளவரசன் தாண்டுவது போலவும், மந்திரவாதியின் உயிர் அவன் தலைமுடியில் இருப்பது மாதிரியும் பல்வேறு கதைகள் உலா வந்த காலம் உண்டு.
 இது போன்ற கற்பனை கதைகள் மட்டும் அல்லாமல் முயல் ஆமை கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என சிறுவயதில் புத்திகூர்மையை ஏற்படுத்தும் பல்வேறு கதைகளும் தாத்தா, பாட்டிகள் தங்கள் பேர குழந்தைகளுக்கு சொல்லிதருவது வழக்கம். 
ஆனால் இன்று அப்படி ஒரு உலகமும் அதை சொல்வதற்கு ஒரு தாத்தா, பாட்டியும் இருந்தார்களா என்று இன்றைய சிறுவர்கள் முதல் இளம் வயது வரை உள்ளவர்கள் வரை வியப்பாக கேட்கும் நிலை உள்ளது. காரணம் வளர்ந்துவிட்ட நவநாகரிக உலகில் பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும், கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து தனிக்குடித்தனம் தொடங்கிவிட்டதும் தான் காரணம்.
கதை சொல்வதற்கு மாணவர்களிடம் ஆர்வம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிகூடங்களில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. அதற்கென ஆசிரியர்களும் இருந்தனர். ஆனால் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் மட்டுமே கல்வி என ஆனபிறகு நீதிபோதனை வகுப்புகளும் நிறுத்தபட்டுவிட்டது. இந்நிலையில் இழந்ததை மீட்டெடுக்கும் முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த வகுப்புகளில் மாணவர்களின் மனம் மகிழ் நிகழ்வுகளே அதிகம். ஆடல், பாடல் மட்டும் அல்லாது தினமும் 2 மாணவர்கள் தங்கள் வீடுகளில் பெரியவர்கள் சொன்ன கதைகளை சொல்லி சக மாணவர்களை குதூகல படுத்தி வருகின்றனர். கதைசொல்வதற்கு மாணவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஏமாற்றம், புத்திசாலித்தனம், பேராசையின் விளைவு என பல கோணங்களில் சொல்லப்படும் கதைகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாத்தா, பாட்டிகளுக்கு மவுசு
இதுகுறித்து கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதி இல்லம் தேடி கல்வி திட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், தாத்தா பாட்டிகளிடம் பேசுவதையே தவிர்த்து வந்த எங்கள் குழந்தைகள் தற்போது கொஞ்சி பேசி கதை கேட்கின்றனர். மேலும் சகமாணவர்கள் சொன்ன கதைகள் எங்களிடம் சொல்லி மகிழ்கின்றனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் தாத்தா, பாட்டிகளுக்கு மவுசு கூடியுள்ளது என தெரிவித்தனர்.

Next Story