முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கு-வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கு-வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 Jan 2022 8:27 PM GMT (Updated: 21 Jan 2022 8:27 PM GMT)

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கில் பதில் அளிக்க வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
முன்னாள் ராணுவ வீரர்களின் பொதுநலன் கருதி இந்த சங்கத்தை தொடங்கியுள்ளோம். பல ஆண்டுகளுக்கு முன்பே ஏழை மற்றும் நிலமற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி விவசாயத்துக்கு தகுதியற்ற நிலங்களை ஒதுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2007-ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தனர்.
அதில் தகுதியான 66 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த இடத்தை எங்களுக்கு வழங்க தடையில்லா சான்றும் அளிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் அந்த இடத்தை எங்களுக்கு அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து வருவாய்த்துறை செயலாளர், நிலநிர்வாகத்துறை கமிஷனர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
==========



Next Story