தஞ்சை முத்திரை கட்டண தாசில்தார் பலி


தஞ்சை முத்திரை கட்டண தாசில்தார் பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:59 PM GMT (Updated: 27 Jan 2022 7:59 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் ேமாதியதில் தஞ்சை முத்திரை கட்டண தாசில்தார் பரிதாபமாக பலியானார்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் ேமாதியதில் தஞ்சை முத்திரை கட்டண தாசில்தார் பரிதாபமாக பலியானார்.
தாசில்தார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நம்பிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 56). தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைக் கட்டண தாசில்தாராக பணியாற்றி வந்த இவர் குடும்பத்துடன் பட்டுக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். 
இவருடைய மனைவி வசந்தா ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்
நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் தாசில்தார் ரமேஷ் தனது சொந்த ஊரான நம்பிவயல் கிராமத்திற்கு பட்டுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அங்கிருந்து இரவு 11 மணிக்கு பட்டுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் அவர் வந்து கொண்டிருந்த போது சாலையில் நிறுத்தி இருந்த டாரஸ் லாரி மீது எதிர்பாராதவிதமாக தாசில்தார் ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான தாசில்தார் ரமேஷ் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story