பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி சூரஞ்சேரியை சேர்ந்த கணேசன் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 52). இவர் தாராநல்லூர் கலைஞர் பாலம் அருகே உள்ள கல்லறை முன்பு 5 கிலோ 150 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தபோது அவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், மேலும் குற்றம் செய்யலாம் என்று கருதப்படுவதாலும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் திருச்சி போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ச்செல்வியிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் அளிக்கப்பட்டது.
இதேபோல் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன், ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கட்டையால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரியவந்தது. இவரையும் திருச்சி போலீஸ் கமிஷனர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையிட்டார். அதன்படி சிறையில் இருக்கும் ராகவேந்திரனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் அளித்தனர்.
Related Tags :
Next Story