எடப்பாடி அருகே பயங்கரம்: சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை-போலீசுக்கு பயந்து கொழுந்தன் தற்கொலை


எடப்பாடி அருகே பயங்கரம்: சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை-போலீசுக்கு பயந்து கொழுந்தன் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2022 10:13 PM GMT (Updated: 30 Jan 2022 10:13 PM GMT)

எடப்பாடி அருகே சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொழுந்தன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

எடப்பாடி:
எடப்பாடி அருகே சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொழுந்தன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சொத்து தகராறு
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த முப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதேஸ்வரி (55). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கோவிந்தனின் தம்பி அண்ணாதுரை (60). தொழிலாளி. இவரும் அதே ஊரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். 
அண்ணன்-தம்பிக்கு இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அண்ணி வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று மாலை கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி பால் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது அவரை வழிமறித்த அண்ணாதுரை, சொத்து தொடர்பாக தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அண்ணாதுரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அண்ணி என்றும் பாராமல் மாதேஸ்வரியை சரமாரியாக வெட்டினார். மாதேஸ்வரிக்கு தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அண்ணாதுரை அங்கிருந்து தனது வீட்டுக்கு தப்பி ஓடினார்.
விஷ மாத்திரை
அங்கு அண்ணியை வெட்டிக்கொலை செய்ததால் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று எண்ணினார். இதனால் அவர் போலீசுக்கு பயந்து வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்றார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட மாதேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
இதனிடையே அண்ணியை கொலை செய்த அண்ணாதுரை வீட்டில் மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அண்ணாதுரை உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
எடப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணியை வெட்டிக்கொலை செய்து விட்டு, கொழுந்தன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story