மாரியம்மன் கோவிலில் பணம் கொள்ளை
ராமநத்தம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலுடன் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த ஆ.பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமநத்தம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாரியம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
வலைவீச்சு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலுடன் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story