பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்கு


பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 April 2022 5:41 PM GMT (Updated: 20 April 2022 5:41 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயங்கொண்டம், 
துக்க நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி படநிலை கிராமத்தை சேர்ந்தவர் தனி வீடு ரவி என்கிற ரவிசங்கர். இவர் பா.ம.க. மாவட்ட செயலாளராகவும், ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது காரில் நிர்வாகிகளுடன் ரவிசங்கர் புறப்பட்டு சென்றார். அப்போது பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி மற்றும் முன்னாள் நகர செயலாளர் மாதவன் தேவா உள்ளிட்டோரும் அதே துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
9 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் முன்னாள் நகர செயலாளர் மாதவன் தேவா உள்ளிட்ட சிலர் காரிலிருந்து திடீரென இறங்கி இரும்புக்கம்பி மற்றும் ஆயுதங்களுடன் வந்து காடுவெட்டி ரவிசங்கரிடம் காரை விட்டு இறங்கினால் காரிலேயே கொளுத்தி விடுவோம் என்றும், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காடுவெட்டி ரவிசங்கர் நேற்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
இதுகுறித்து புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் மாதவன்தேவா, கரடிகுளம் கிராமத்தை சேர்ந்த  சிற்றரசு, கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார், அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம், இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நக்கீரன், தண்டலை கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி, சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த செல்ல ரவி, உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன், ஆண்டிமடம் அருகே உள்ள தத்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் வைத்தி உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story