ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்,
ஓமலூர் அடுத்த பாகல்பட்டி எஸ்.கே. ஸ்டீல் சிட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கலாராணி (வயது 42). இவர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 19-ந் தேதி காலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்கதவு பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டின் பின் கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் திருட்டு போனதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலாராணி ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கலாராணி வசித்த வீ்ட்டுக்கு அருகே சங்கர் என்பவரும், அவருடைய மனைவி சரண்யாவும் வசித்து வந்தனர். இவர்களும் வேலைக்கு சென்று விட்டு இரவில் திரும்பி வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் ஓமலூர் போலீசில் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர். அதன்பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story