ஓடையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரி குப்பை வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


ஓடையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரி குப்பை வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 5:51 PM GMT (Updated: 10 May 2022 5:51 PM GMT)

திருச்செங்கோடு அருகே ஓடையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரி குப்பை வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலச்சிபாளையம்:
ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்
திருச்செங்கோடு அருகே உள்ளது தேவனாங்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கடைகளில் இருந்து பெறப்படும் கோழி, ஆடு மற்றும் மாட்டிறைச்சி கழிவுகள் செரமிட்டான்பாளையத்தில் இருந்து தோக்கவாடி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. மேலும் அங்குள்ள ஏரியின் ஓடைகளிலும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாசடைந்து நிறம்மாறி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடலில் அரிப்பு மற்றும் உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. 
குப்பை வண்டிகள் சிறைபிடிப்பு
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம், சாலையோரத்திலும், ஓடையிலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், மலைபோல் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற பலமுறை வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அந்த பகுதியில் கழிவுகளை கொட்டி வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று கழிவுகளை கொட்ட வந்த ஊராட்சி குப்பை வண்டிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் வந்து குப்பைகளை கொட்டமாட்டோம் என்று உறுதி அளிக்கும் வரை வாகனங்களை விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் ஆகியும் ஊராட்சி நிர்வாகத்தினர் வரவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்செங்கோடு-தேவனாங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிறைபிடித்த ஊராட்சி குப்பை வண்டிகளையும் சாலையில் நிறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தொடர்ந்து ஊராட்சி தலைவர் அருண் அங்கு வந்தார். அவர் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 20 நாட்களில் சாலையோரம் மற்றும் ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் பரபரப்பு நிலவியது.

Next Story