காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடக்கம்


காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 10 May 2022 6:57 PM GMT (Updated: 10 May 2022 6:57 PM GMT)

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வைகாசி திருவிழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

காரைக்குடி, 
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வைகாசி திருவிழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
வைகாசி திருவிழா
காரைக்குடியில் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இதையொட்டி நேற்று மாலை இந்த விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக மாலை 6.29 மணிக்கு காப்புக்கட்டப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 2-வது நாள் இரவு காமதேனு வாகனத்திலும், 3-வது நாள் அன்ன வாகனத்திலும், 4-வது நாள் கைலாச வாகனத்திலும், 5-வது நாள் வெள்ளி ரதத்திலும், 6-வது நாள் வெள்ளி ரிஷிப வாகனத்திலும், 7-வது நாள் வெள்ளி குதிரை வாகனத்திலும் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தேரோட்டம்
8-வது நாள் திருவிழாவான வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8.13 மணிக்கு அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்று காட்டம்மன் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காரைக்குடி நகர் முழுவதும் இருந்து பெண்கள் மதுக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தரிசனம் செய்வது வழக்கம். மறுநாள் காட்டம்மன் கோவிலில் இருந்து தேர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. 
10-வது நாளான வருகிற 19-ந்தேதி யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சியும், மறுநாள் காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.  விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story