கும்பகோணம் சாரங்கபாணி-சக்கரபாணி ஓலை சப்பரத்தில் வீதி உலா


கும்பகோணம் சாரங்கபாணி-சக்கரபாணி ஓலை சப்பரத்தில் வீதி உலா
x
தினத்தந்தி 10 May 2022 8:37 PM GMT (Updated: 10 May 2022 8:37 PM GMT)

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி-சக்கரபாணி ஓலை சப்பரத்தில் வீதி உலா சென்றனர்.

கும்பகோணம்
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவது கும்பகோணம் சாரங்கபாணி கோவில்.
இந்த கோவிலில், கடந்த 6-ந் தேதி  சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதேபோல, நேற்று முன்தினம் இரவு சாரங்கபாணி-சக்கரபாணி ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர்.
14-ந் தேதி தேரோட்டம்
 இதனையொட்டி வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி-சக்கரபாணி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஓலை சப்பரம் 4 வீதிகளிலும் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Next Story