கர்நாடகத்திலும் தக்காளி காய்ச்சல் பரவியதா?; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில்


கர்நாடகத்திலும் தக்காளி காய்ச்சல் பரவியதா?; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில்
x
தினத்தந்தி 11 May 2022 9:26 PM GMT (Updated: 11 May 2022 9:26 PM GMT)

கர்நாடகத்திலும் தக்காளி காய்ச்சல் பரவியதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிக்குன்குனியா

  கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவுகிறது. கர்நாடகத்தில் இதுவரை இந்த தக்காளி காய்ச்சல் பரவவில்லை. இது அதிகமாக பரவக்கூடிய நோய் அல்ல. இது உடலின் தோள் பகுதியில் சிவப்பு நிறத்தில் புண் (ரேசஸ்) போல் ஏற்படும். இது தக்காளியை போல் இருக்கிறது. இது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இது கொரோனவுடன் தொடர்புடையது கிடையாது. அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வீக்கம் மற்றும் உடல் சோர்வு போன்றவை தான் இதன் அறிகுறிகள். இது சிக்குன்குனியாவை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

  இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான மங்களூரு, உடுப்பி, குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில், காய்ச்சலுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த நோய் அறிகுறி உள்ளதா? என்பதை கண்காணிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

நோய் அறிகுறிகள்

  தக்காளி காய்ச்சல் பரவுவதை பற்றி மக்கள் பீதி அடைய தேவை இல்லை. இந்த நோய் அறிகுறிகள் பிற வகைாயன காய்ச்சல் பாதிப்பிலும் ஏற்படுகிறது. மேலும் இது ஒரு உள்ளூர் நோய் என்பதால் அது கேரளாவை தாண்டி பரவாது என்று கருதுகிறேன்.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story